Monday, December 10, 2018

பன்றிக் காய்ச்சல் உயிரிழப்பு: 6-ஆவது இடத்தில் தமிழகம்

பன்றிக் காய்ச்சலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் தமிழகம் 6-ஆவது இடத்தில் உள்ளது. மாநிலத்தில் பன்றிக் காய்ச்சலுக்கு இதுவரை 37 பேர் உயிரிழந்துள்ளனர்.

பிறமாநிலங்களுடன் ஒப்பிடுகையில் இது குறைவாகும். இந்தப் பட்டியலில் மகாராஷ்டிரம் முதலிடத்தில் உள்ளது.
அந்த மாநிலத்தில் 422 பேர் பன்றிக் காய்ச்சலுக்கு பலியாகியுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
பிற மாநிலங்களில் மகாராஷ்டிரத்துக்கு (422 பேர்) அடுத்தபடியாக ராஜஸ்தான், குஜராத், கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் பன்றிக் காய்ச்சலால் ஏற்பட்ட உயிரிழப்பு அதிகம்.
ஹெச்1என்1 மற்றும் ஹெச்2என்3 போன்ற பல்வேறு வகையான இன்ஃப்ளூயன்ஸா வைரஸ்கள் மூலமாக பன்றிக் காய்ச்சல் பரவுகிறது.
கடந்த 7 ஆண்டுகளில் மட்டும் சுமார் 7,500-க்கும் மேற்பட்டோர் அந்தக் காய்ச்சலுக்கு பலியானதாக மத்திய சுகாதாரத் துறை புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

மிஸ் வேர்ல்டு 2018 போட்டியில் மெக்சிகோ அழகி வனிசா போன்ஸ் டி லியோன் பட்டம் வென்றார்


சீனாவின் சான்யா நகரில் 68வது உலக அழகி போட்டி இன்று நடைபெற்றது. இதில் மிஸ் வேர்ல்டு 2018 போட்டி நடந்தது. இதில், மெக்சிகோவை சேர்ந்த வனிசா போன்ஸ் டி லியோன் 2018-ம் ஆண்டின் மிஸ் வேர்ல்டு பட்டத்தை வென்றார்.  கடந்தாண்டு உலக அழகி பட்டத்தை வென்ற இந்தியாவை சேர்ந்த மனுஷி சில்லர் வனிசாவுக்கு உலக அழகி கீரீடத்தை சூட்டினார். கடந்த ஆண்டு நடைபெற்ற உலக அழகி போட்டியில் இந்தியாவை சேர்ந்த மனுஷி சில்லர் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது. 

தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பிற்கு 181 என்ற ஹெல்ப்லைன் - முதலமைச்சர் தொடங்கி வைத்தார்

தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பிற்கு 181 என்ற ஹெல்ப்லைன் - முதலமைச்சர் தொடங்கி வைத்தார்   பெண்களின் பாதுகாப்பிற்காக ‘181’ இலவச தொலைபேசி எண்ணை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. டெல்லி, குஜராத் உள்ளிட்ட ஒரு சில மாநிலங்களில் மட்டும் இந்த சேவை செயல்பாட்டில் உள்ள நிலையில், தமிழகத்திலும் இந்த சேவையை விரிவுபடுத்த முடிவு செய்யப்பட்டது.  அதன்படி சென்னை அம்பத்தூரில் உள்ள அம்மா கால் சென்டர் மையத்தின் ஒரு பகுதியில் 181 இலவச தொலைபேசி எண்ணுக்கான மையம் அமைக்கப்பட்டது.

பரிசோதனை முறையில் இந்த மையம் செயல்பட்டு வந்தது. இந்நிலையில் இந்த ‘181’ இலவச தொலைபேசி எண் வசதியை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று அறிமுகம் செய்தார். அதற்கான கால்சென்டரையும் தொடங்கி வைத்தார்.

கனிமொழிக்கு சிறந்த பெண் எம்.பி. விருது

கனிமொழிக்கு சிறந்த பெண் எம்.பி. விருது

பிரபல செய்தி நிறுவனமான லோக் மட் செய்தி நிறுவனம் சார்பில், நாடாளுமன்ற விருதுகள் 2-வது ஆண்டாக இந்த ஆண்டும் வழங்கப்பட உள்ளது. வரும் 13-ம் தேதி மாலை 6 மணிக்கு டெல்லி அம்பேத்கர் சர்வதேச மையத்தில் நடைபெறும் விழாவில் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு இந்த விருதுகளை வழங்க உள்ளார்.

2018-ம் ஆண்டுக்கான நாடாளுமன்ற சிறந்த பெண் உறுப்பினருக்கான விருது திமுக எம்.பி. கனிமொழிக்கு வழங்கப்படுகிறது.  ''நாடாளுமன்றத்தில் கடந்த பத்தாண்டுகளாக கனிமொழி மகத்தான பங்காற்றியுள்ளார்.

ஜனநாயகத்தின் மதிப்பீடுகள், கொள்கைகளுக்கு வலு சேர்த்துள்ளார். எனவே மாநிலங்களவை திமுக உறுப்பினர் கனிமொழிக்கு  2018-ம் ஆண்டுக்கான நாடாளுமன்ற சிறந்த பெண்  உறுப்பினருக்கான விருது வழங்கப்பட உள்ளது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்த விருதுகளை டெல்லியில் 13-ம் தேதி துணை ஜனாதிபதி வழங்குகிறார்

2018 ஆண்டு உணவுக்கான குறியீட்டில் இந்தியாவுக்கு 33 வது இடம்

2018 ஆண்டு உணவுக்கான குறியீட்டில் இந்தியாவுக்கு 33 வது இடம்

பொருளாதார நுண்ணறிவு பிரிவு மற்றும் உணவு மற்றும் ஊட்டச்சத்துக்கான பரில்லா மையத்தால் வெளியிடப்பட்ட, 2018க்கான உணவுக்கான குறியீட்டில் (Food Sustainability Index), இந்தியாவானது 67 நாடுகளில் 33வது இடத்தைப் பிடித்துள்ளது.

பிரான்ஸ் நாடானது முதலிடத்தில் உள்ளது. இக்குறியீடு, மிலனில் நடைபெற்ற BCFN உணவு மன்றத்தில் வெளியிடப்பட்டது.

முக அடையாளம் மூலம் மாணவர்களின் வருகை பதிவு

முக அடையாளம் மூலம் மாணவர்களின் வருகை பதிவு

முக அடையாளம் மூலம் மாணவர்களின் வருகையை பதிவு செய்யும் நவீன தொழில்நுட்ப முறை இந்தியாவிலேயே முதல்முறையாக தமிழகத்தில் சென்னை அசோக்நகர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த அதிநவீன வருகை பதிவு திட்டம் SMART ATTENDANCE SCHEME என்று பெயரிடப்பட்டுள்ளது.  

உலக மனித உரிமைகள் நாள்: 10-12-1950


1948-ஆம் ஆண்டு டிசம்பர் 10-ஆம் நாள் ஒன்றுகூடிய ஐக்கிய நாடுகளின் பொது அவையால் அனைத்துலக மனித உரிமைகள் சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்டதை பெருமைப்படுத்தும் பொருட்டு இந்நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.

ஐ.நா.வின் பொது அவை நாடுகளுக்கும் தன்னார்வ நிறுவனங்களுக்கும் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கிணங்க 1950 முதல் உலக மனித உரிமைகள் நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. 

இந்நாளில் ஐந்தாண்டுக்கு ஒருமுறை வழங்கப்படும் மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகளின் பரிசு வழங்கப்படும். மேலும் பல அரசு மற்றும் அரசு சார்பற்ற நிறுவனங்களும் இந்நாளில் பல முக்கிய நிகழ்வுகளை நடத்துவது வழக்கமாகும்.