Wednesday, November 28, 2018

செவ்வாய் கிரகத்தில் இறங்கியது இன்சைட் விண்கலம்

அமெரிக்காவின் இன்சைட் செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியது.

செவ்வாய்கிரகத்தை ஆய்வு செய்யும் பொருட்டு அமெரிக்கா அனுப்பிய 9வது விண்கலம் இதுவாகும்.

கடந்த மே மாதம் முதல் 6 மாதங்களாக 548 மில்லியன் கி.மீட்டர் தொலைவு பயணித்து செவ்வாயை சென்றடைந்துள்ளது. 

செவ்வாய்கிரகத்தை ஆய்வு செய்யும் பணியில் அமெரிக்கா பெரும் முனைப்பு காட்டி வருகிறது. 

செவ்வாய் கிரகத்தை மிக ஆழமாக ஆய்வு செய்யும் விதமாக இன்சைட் விண்கலம் அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த விண்கலம் வெற்றிகரமாக கால்பதித்து முதல்படத்தை அனுப்பி வைத்ததது.

உறுப்பு தானத்தில் சிறந்த மாநிலமாக தமிழகம் தேர்வு

நாட்டிலேயே உறுப்பு தானத்தில் சிறந்த மாநிலமாக தமிழகம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக, மத்திய அரசு அறிவித்துள்ளது. 

தமிழகம் இந்த விருதை தொடர்ந்து 3-வது முறையாக பெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

புதுடெல்லியில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை மற்றும் தேசிய உறுப்பு மற்றும் திசு மாற்று அமைப்பின் சார்பாக நடைபெற்ற 8 வது இந்திய உடல் உறுப்பு தான தின விழாவில், உடல் உறுப்பு தானத்தில் தமிழக அரசு தொடர்ந்து மூன்றாவது முறையாக முதலிடம் பெற்றதற்கான விருதினை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சர் அனுப்பிரியா பட்டேல் தமிழக மக்கள் நலவாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம் வழங்கினார்.

உதய் திட்டத்தின் மூலம் இந்திய விவசாயிகளுக்குத் திறன் பயிற்சி

இந்தியாவைச் சேர்ந்த இரண்டு லட்சம் விவசாயிகளுக்கு 2020ஆம் ஆண்டுக்குள் பயிற்சியளிக்கவுள்ளதாக, ஆஸ்திரேலிய நிறுவனமான, மூஃபார்ம் தெரிவித்துள்ளது.

உதய் திட்டத்தின் மூலம் இந்திய விவசாயிகளுக்குக் கால்நடைப் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு போன்ற தளங்களில் திறன் மேம்பாட்டுப் பயிற்சியை அளிக்கவிருக்கிறது மூஃபார்ம் நிறுவனம். 

இந்திய வெண்மைப் புரட்சியின் தந்தையான வர்கீஸ் குரியன் பிறந்தநாளை முன்னிட்டு, டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மூஃபார்ம் நிறுவனர், பரம் சிங் இந்தப் பயிற்சி திட்டத்தை அறிவித்தார்.

அவர் உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், ஆந்திரப் பிரதேசம், ஹரியானா மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது” என்றார்.  

Tuesday, November 27, 2018

இந்தியாவின் 10வது பிரதமர் வி.பி.சிங் இறந்த தினம் - நவம்பர் 27

இந்தியாவின் 10வது பிரதமர் வி.பி.சிங் உடல் நலக்குறைவால் 27-11-2008 அன்று மரணம் அடைந்தார்.

1931-ம் ஆண்டு ஜுன் மாதம் 25-ந்தேதி அலகாபாத் நகரில் பிறந்த வி.பி.சிங் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர். இவரது தந்தை உத்தரபிரதேசத்தில் இருந்த `தையா' சமஸ்தான மன்னர் ஆவார்.

அந்த மன்னருக்கு 2 மகன்கள். மூத்த மகன் சந்திரசேகர் பிரதாப் சிங். இரண்டாவது மகன்தான் வி.பி.சிங் என்றழைக்கப்பட்ட விஸ்வநாத் பிரதாப் சிங். விஸ்வநாத் பிரதாப் சிங். டிசம்பர் 2, 1989 லிருந்து நவம்பர் 10 1990 வரை இவர் இந்தியாவின் பிரதம மந்திரியாக இருந்தார்.

புதிய தலைமை தேர்தல் ஆணையராக சுனில் அரோரா நியமனம்

இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத்தின் பதவிக்காலம் டிசம்பர் 2-ம் தேதியுடன் நிறைவடைகிறது.

இதையடுத்து புதிய  தலைமை தேர்தல் ஆணையராக சுனில் அரோராவை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நியமித்துள்ளார்.

சுனில் அரோரா டிசம்பர் 2-ம் தேதி தலைமை தேர்தல் ஆணையராக பதவியேற்க உள்ளார். 

ராஜஸ்தானைச் சேர்ந்த சுனில் அரோரா 1980-ம் ஆண்டில் ஐஏஎஸ் முடித்தார். தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை, நிதித்துறை, ஜவுளித்துறை மற்றும் திட்டக் கமிஷனில் பணியாற்றியுள்ளார்.

இந்தியன் ஏர்லைன்ஸ் சேர்மனாகவும் 5 ஆண்டுகள் பணியாற்றி உள்ளார்.

Monday, November 26, 2018

நாட்டிலேயே முதல்முறை: அனைத்து பெண்களுக்கும் கராத்தே பயிற்சி

கேரளாவின், கோட்டயம் மாவட்டத்தில்  உள்ள கங்காழா கிராமத்தில் 10 வயது முதல் 60 வயதுக்கு உட்பட்ட அனைத்துப் பெண்களுக்கும் தற்காப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

வரும் டிசம்பர் மாதத்துக்குள் கிராமத்தில் உள்ள 7,800 பெண்களுக்கும் தற்காப்பு கலை பயிற்சி அளிக்கப்பட்டுவிடும்.

அதன்பின் நாட்டிலேயே முதல் முதல்முறையாக, தற்காப்பு கலைப் பயிற்சி முழுமையாகப் பெற்றுள்ள கிராமம் என்ற பெருமையை கங்காழா பெறும்.

கடந்த 2017-ம் ஆண்டு, ஏப்ரல் மாதம் நிர்பயா திட்டம் மூலம் கிடைத்த நிதியில் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது

Sunday, November 25, 2018

காமன்வெல்த் வாள் சண்டை: தமிழக வீராங்கனை பவானி தேவிக்கு தங்கம்

காமன்வெல்த் வாள் சண்டை சாம்பியன்ஷிப் போட்டி ஆஸ்திரேலியாவில் உள்ள கான்பெராவில் நடைபெற்று வருகிறது. இதன் சீனியர் ‘சேபர்’ பிரிவில் சென்னையை சேர்ந்த சிஏ பவானி தேவி பங்கேற்றார்.

இறுதிப்போட்டியில் இங்கிலாந்தை சேர்ந்த எமிலி ராக்சுடன் மோதினார்.

உலகின் முன்னணி வீராங்கனைகளில் ஒருவரான எமியை 15-12 என்ற கணக்கில் வீழ்த்தி தமிழக வீராங்கனை பவானிதேவி தங்கம் வென்றார்.

இதன்மூலம் காமன்வெல்த் வாள்சண்டையில் சீனியர் பிரிவில் தங்கப்பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையை பவானிதேவி படைத்தார்.

பவானிதேவி இந்த ஆண்டு தொடக்கத்தில் ஐஸ்லாந்தில் நடைபெற்ற சேட்லைட் காமன்வெல்த்தில் வெள்ளிப்பதக்கமும், கடந்த ஆண்டு உலககோப்பை சேட்லைட் போட்டியில் தங்கப்பதக்கமும் பெற்று இருந்தார்.