Thursday, November 22, 2018

Nov 21 - தெலுங்கானா மாநில தேர்தலில் முதன் முறையாக திருநங்கை போட்டி

தெலுங்கானா மாநில சட்டமன்றத் தேர்தலில் ’சந்திரமுகி’ எனும் 32 வயது திருநங்கை ஒருவர் போட்டியிடுகிறார்.

தெலுங்கானா மாநில தேர்தலில் முதன் முறையாக, திருநங்கை ஒருவர் பாஜக- காங்கிரஸ் வேட்பாளர்களை எதிர்த்து வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.

மார்க்ஸிஸ்ட்-பகுஜன் (இடது) கூட்டணி கட்சிகளில், பகுஜன் (இடது) கட்சி சார்பில் சந்திரமுகி ஹைதராபாத்தில் உள்ள கோஷாமஹல் தொகுதிக்கு வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.

Nov 21 - இயற்பியல் விஞ்ஞானி சர்.சி.வி.இராமன் மறைந்த தினம் - நவ.21*

சர்.சந்திரசேகர வெங்கட ராமன் (சர்.சி.வி.ராமன்) 1888-ம் ஆண்டும் நவம்பர் 7-ந் தேதி தமிழ்நாட்டில் திருச்சிராப்பள்ளியில் பிறந்தார்.

சென்னையில் பிரெசிடென்சி கல்லூரியில் 1902-ம் ஆண்டு சேர்ந்த அவர், 1904-ம் ஆண்டு இளங்கலை பட்டம் பெற்றார். தனது 16-வது வயதில் கல்லூரியில் முதலாவதாக வந்து தங்க பதக்கம் பெற்றார்.
1907-ல் முதுகலை பட்டமும் பெற்றார்.

சி.வி.இராமன் பட்டம் பெற்றதும், அறிவியல் துறை சார்ந்த வேலை வாய்ப்புகள் இல்லாததால், இந்திய அரசுப் பணவியல் துறையில் 1907ல் ஒரு கணக்காயராகச் சேர்ந்தார்.

என்றாலும் பணியின் கூடவே கொல்கத்தாவில் உள்ள அறிவியல் வளர்ச்சிக் கழகத்தில் ஒளிச்சிதறல் பற்றி செயல்வழி ஆய்வுகள் நடத்தி வந்தார்.  1930-ல் இயற்பியல் துறைக்கான நோபல் பரிசை பெற்றார்.

ஒளி ஒரு பொருளின் ஊடே செல்லும் பொழுது சிதறும் ஒளியலைகளில் ஏற்படும் அலைநீள மாற்றத்தை இவர் கண்டுபிடித்தார். இப்படிச் சிதறும் ஒளியின் அலைநீள மாற்றத்திற்கு இராமன் விளைவு என்று பெயர். இக்கண்டுபிடிப்புக்குத் தான் இவருக்கு நோபல் பரிசு அளிக்கப்பட்டது.

இக்கண்டுபிடிப்பு இன்று பொருள்களின் பல விதமான பண்புகளைக் கண்டறிய (பொருளுக்கு கேடு ஏதும் நேராமலும்) மிகவும் பயனுடையதும் உலகில் புகழ் பெற்றதும் ஆகும்.

முழுமையாக இந்தியாவிலேயே படித்த ஒரு அறிஞருக்கு நோபல் பரிசு கிடைத்தது முதல் முறையாகும். 1970-ம் ஆண்டு நவம்பர் மாதம் இதே நாளில் (நவ.21) இந்த மண்ணுலகை விட்டு பிரிந்தார். 

Nov 21 - நிமோனியா நோயால் இந்தியாவில் 2 நிமிடத்துக்கு ஒரு குழந்தை பலியாகிறது

வயிற்றுப்போக்கு மற்றும் நிமோனியா எனப்படும் நுரையீரல் அழற்சி நோய் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளை பெருமளவில் தாக்குகிறது. இந்த நோய்க்கு குழந்தைகள் பலியாகின்றனர்.

இதுகுறித்த அறிக்கை சமீபத்தில் வெளியானது. அதில், 2016-ம் ஆண்டு சர்வதேச அளவில் எடுக்கப்பட்ட கணக்கின்படி இந்தியா 5-வது இடத்தில் உள்ளது.

இங்கு தினமும் 735 குழந்தைகள் இறக்கின்றன. இதன்படி இந்த நோய்க்கு இந்தியாவில் 2 நிமிடத்துக்கு ஒரு குழந்தை பலியாவதாக கணக்கிடப்பட்டுள்ளது.

Nov 21 - 3,600 கோடியில் 2 போர்க்கப்பல் கட்ட இந்தியா-ரஷ்யா ஒப்பந்தம்

கோவா கப்பல் கட்டும் தளத்தில் 2 போர்க் கப்பல்களை கட்டுவதற்கான 3,600 கோடி ஒப்பந்தம், இந்தியா-ரஷ்யா இடையே கையெழுத்தானது. 

இந்திய கடற்படைக்கு தல்வார் ரக போர்க் கப்பல்களை கட்டுவது தொடர்பாக இந்தியா, ரஷ்யா இடையே பேச்சுவார்த்தை நடந்து வந்தது. 

இந்த ஒப்பந்தம், இந்திய ராணுவ பொதுத்துறை நிறுவனமான கோவா சிப்யார்ட் லிமிடெட், ரஷ்ய அரசின் ராணுவ மேஜர் ரோசோபோர்ன் எக்ஸ்போர்ட் நிறுவனத்திற்கும் இடையே கையெழுத்தானது.

Nov 21 - ஐநா சுற்றுச்சூழல் அமைப்பின் தலைவர் ராஜினாமா

கென்யாவின் நைரோபி நகரை தலைமையிடமாக கொண்டு, ஐ.நா. சுற்றுச்சூழல் அமைப்பு செயல்படுகிறது.

இந்த அமைப்பின் தலைவராக பதவி வகித்து வந்த எரிக் சோல்ஹிம் தனது அதிகாரப்பூர்வ பயணங்களுக்காக 5 லட்சம் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.3.57 கோடி) செலவிட்டது, அந்த அமைப்பின் தணிக்கையில் கண்டறியப்பட்டது.
மேலும், தனது பயணங்களுக்கான செலவுத் தொகையை பெறுவதில், அவர் நெறிமுறைகளுக்கு மாறாக செயல்பட்டதாக தணிக்கை அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டது. 

இதைத் தொடர்ந்து, அவர் பதவி விலகியுள்ளார். பதவி விலகியுள்ள எரிக் சோல்ஹிம்  நார்வே நாட்டைச் சேர்ந்த முன்னாள் சுற்றுச்சூழல் அமைச்சர் ஆவார். 

Nov 21 - ஆந்திராவில் நிலங்களுக்கு "புதார் எண்" புதிய திட்டம்

ஆந்திராவில், நிலம் தொடர்பான ஆவணங்களை மக்கள் பார்க்கும் வகையில், 'புதார்' என்ற இணையதளத்தை, அம்மாநில அரசு துவக்கி உள்ளது.

மத்திய அரசால் வழங்கப்பட்டுள்ள, ஆதார் எண்ணை போன்று, ஆந்திராவில், நில ஆவணங்களுக்கு, 'புதார்' என்ற, 11 இலக்க அடையாள எண் அளிக்கப்படுகிறது. ஆந்திராவில் உள்ள அனைத்து விவசாய நிலம், ஊரக, நகர்ப்புற சொத்துகளுக்கு, 'புதார்' அடையாள எண் வழங்கப்படுகிறது.  இந்த எண்ணை பயன்படுத்தி, மக்கள், தங்கள் நிலம் மற்றும் சொத்துகள் தொடர்பான ஆவணங்களை, 'புதார்' என்ற அரசு இணைய தளத்தில் பார்க்கலாம். ஆந்திராவின் புதிய தலைநகர் அமராவதியில், இந்த திட்டத்தை, தெலுங்கு தேசம் கட்சித் தலைவரும், மாநில முதல்வருமான சந்திரபாபு நாயுடு, துவக்கி வைத்தார். 

Nov 21 - நான்கு கேமராக்களைக் கொண்ட உலகின் முதல் ஸ்மார்ட்போன்

நான்கு கேமராக்களைக் கொண்ட, உலகின் முதல் ஸ்மார்ட்போனை, சாம்சங் நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

இந்தியாவில் ஸ்மார்ட்போன் விற்பனையில் முன்னணியில் இருக்கும் சாம்சங் நிறுவனம், கேலக்ஸி A9 ஸ்மார்ட்போனில் முதல்முறையாக நான்கு ரியர் கேமராக்களை அறிமுகம் செய்தது. 

இந்த போன் கடந்த மாதம் மலேசியாவில் நடைபெற்ற சாம்சங் கூட்டத்தின்போது வெளியிடப்பட்டது.