ஜி-20 உச்சி மாநாடு முதல் முறையாக இந்தியாவில் 2022-ம் ஆண்டு நடைபெறும் என பிரதமர் மோடி அறிவித்து உள்ளார்.
உலக அளவில் மிகப்பெரிய பொருளாதாரத்தை கொண்டிருக்கும் முதல் 20 நாடுகள் இணைந்து ‘ஜி-20’ என்ற பெயரில் கூட்டமைப்பை உருவாக்கி இருக்கின்றன.
இந்தியாவும் அங்கம் வகிக்கும் இந்த கூட்டமைப்பின் உச்சி மாநாடு ஆண்டுதோறும் ஏதாவது ஒரு உறுப்பு நாட்டில் நடந்து வருகிறது.
உலகின் ஒட்டுமொத்த உற்பத்தியில் 90 சதவீதத்தையும், 80 சதவீத வர்த்தகத்தையும் கொண்டிருக்கும் இந்த நாடுகள், உலக மக்கள் தொகையில் 3-ல் இரண்டு பங்கையும், ஒட்டுமொத்த நிலப்பரப்பில் சுமார் பாதியளவையும் கொண்டிருக்கின்றன. அப்படி முக்கியத்துவம் வாய்ந்த இந்த மாநாட்டை இந்தியா இதுவரை நடத்தியது இல்லை. ஆனால் 2022-ம் ஆண்டு நடைபெறும் மாநாட்டை இந்தியா நடத்துவதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டு இருக்கிறது. இந்தியா சுதந்திரம் பெற்ற 75-வது ஆண்டில், இந்த மாநாட்டை நடத்துவது கூடுதல் சிறப்பாக அமைந்துள்ளது.
அர்ஜென்டினாவின் பியுனோஸ் அயர்ஸ் நகரில் நடைபெற்ற 13-வது ஜி-20 மாநாட்டின் இறுதி நிகழ்வில் பேசும்போது, பிரதமர் மோடி இந்த தகவலை வெளியிட்டார். இந்த வாய்ப்பை விட்டு கொடுத்ததற்காக இத்தாலிக்கு அவர் நன்றியும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment